Sunday 15 September 2013

பாரதியார் - பாரதிதாசன் விழா 2013


 
பாரதியார் - பாரதிதாசன் விழா

நேற்று மாலை 6 மணியளவில் இவ்விழாவைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்தியது. இதற்குத் தலைவராக திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள், சிறப்பு விருந்தினராகத் திரு இரா தினகரன் அவர்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் சிறப்புரை வழங்க திரு சி பாண்டித்துரை அவர்கள் ஆகியோர் சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்புரை வழங்கிய திரு சி பாண்டித்துரையே என் மனக்கண்ணில் நிற்கிறார். இவர் மலேசியத் தொலைக்க்காட்சிப் புகழ், உலகலாவிய தமிழ் இலக்கியப் பேச்சாளர் மற்றும் வழக்கறிஞர் என பல துறைகளில் சகலகலா வல்லவராக இருக்கிறார். ஆனால் சற்று உற்றுப் பாருங்கள். இவர் பணி முழுவதும் பேச்சை சுற்றியே இருக்கிறது. இவர் சொற்றிறன் பெற்றவர். இவரின் நாவில் தமிழ் அமிழ்தமாக பொழிய பல லீலைகளை நிகழ்த்திக் கொண்டே நம் செவிகளுக்கு இன்சுவை விருந்தாக இருந்தது.

தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே என்பதற்கு இணங்க பாரதியார் – பாரதிதாசன் இருவரும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய பங்கை நன்கு எடுத்துரைத்தார்.

பாரதி ஒரு சாதாரண கவிஞரா? மகாகவியா? என்று நம்முள் கேள்வி எழுப்பி ஒரே பாட்டில் அவரின் பெருமையை நம் மண்ணில் பரப்பினார் சிறப்புப் பேச்சாளர்.

‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’

சிந்து எங்குள்ளது? வடக்கில் சரி


‘சேரநன்னாட்டிளம் பெண்களுடனே’

வடப்பகுதியிலிருந்து அப்படியே கீழ் புறம் நோக்கி தென்நாட்டான சேரன் ஆண்ட பூமியை எடுத்துரைத்து, பின்பு


‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று

ஆந்திர தேசத்தில் உள்ளவர்களின் நலனில் அக்கறைக் கண்டார். இந்தியாவில் உள்ள அனைத்தவரையும் ஜாதி மதம் ஏதும் பாராமல் வாழ்ந்தவர் மகாகவி பாரதி.

 

 

‘கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்’

என்றும் ஒவ்வொரு நிலங்களின் பெருமைகளைப் பாடியவாரே அடுத்த வரிகளையும் சேர்த்துக் கொள்கிறார்.

‘சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’

தன் நாட்டு நீரை தனக்கென்று பயன்படுத்த விரும்பாமல் ஏனைய நாடுகளுக்கும் போய் சேர வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டதாலும் அவர் மகாகவி பாரதியார் ஆவார்.

இவர் மண்ணுக்கும், பெண்ணுக்கும் மற்றும் ஜாதி கொடுமைகளுக்கும் விடுதலை பெற்றுத் தருவதற்குக் கடுமையாகப் புரட்சி கொண்டார்.

ஜாதி இல்லையடி பாப்பா என்ற பாடல் கூட மறை முகமாக பெரிய பாப்பாக்களுக்குத்தான் எடுத்துரைத்துள்ளார் என்ற உண்மையைத் தயங்காமல் பேசினார் சிறப்புரையாற்றியவர்.

இவர் பேச்சில் நான் கண்ட பல தகவல் துளிகளிலிருந்து ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

துரைசாமி, துரைசாமி என்று மலேசியாவில் வாழும் தோட்டத்துக்காரர்களுக்கு குலசாமியாகத் துரைசாமி என்ற ஒரு வெள்ளை சிலை உள்ளது. அது உண்மையிலேயே வெள்ளைக்காரரைக் கும்பிடும் சிலையாகவே இருந்துவந்தது. அந்த அளவுக்கு அடிமைத்தனம் குடியிருந்தது.

இப்படியே வாழ்வின் உண்மை ரகசியங்களை நகைச்சுவையுடன் போட்டுடைக்கவே, அரங்கத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து சிரித்தோம். இவர் பேச்சைக் கேட்க நான் மீண்டும் விரும்புகிறேன். அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

இந்த நிகழ்வைச் சிறப்பாக வழிநடத்திச் சென்ற ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி.

 


 

No comments:

Post a Comment